வா என்கிறாயா? ஹுஹும்.
போ என்கிறாயா? ஹுஹும்.
மௌனமாகத்தான் இருக்கிறாய்.
எப்பிறவியிலும் உலகத்தின் மீதே காதல்.
கால் மீது கால் உனதுதான்.
இரண்டு கைகளும் ஒவ்வொரு பக்கமாய்.
கருப்பு வெள்ளையில் ஆடை தலைபாகை உட்பட.
எதற்கு இந்த அலங்காரம்?
இந்த இருட்டில் உலகை இரசிக்கிறாயா?
இல்லை மீண்டும் ஒருமுறை
சுதந்திர கீதம் இயற்றுகிறாயா?
எட்டயபுரத்து கவியே
மௌனம் வேண்டாம்.
எத்தனை முறை வாசித்தும்
கண்ணம்மாவின் நினைப்பு மட்டும்
தலை தட்டுகிறது.
மற்ற கவியெல்லாம் பின்னால் தொடர்கிறது.
இனியும் என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?
வேண்டுமென்றால் இதில் ஏதேனும் ஒன்று செய்.
நெற்றிபொட்டில் வைத்து சுடு
கூறிய கத்தியைக்கொண்டு கிழி
பாறை மீது மோதி தள்ளு
எப்பாடு பட்டாவது கொன்று விடு.
ஆனால்
கண்ணம்மாவின் இரண்டாம் பாகம்
இயற்றிவிடாதே!!

No comments:
Post a Comment