Thursday, May 27, 2010

எவர் வீட்டு திண்ணையில் உறங்குவேன்?

கால்கள் களைக்க ஓடியாடி
கைகள் களைக்க ஆடிபாடி
உதடுகள் சிரித்து உறவாடி
கண்கள் சிவக்க கோபமாகி
பின் சாந்தமாகி, மௌனமாகி,
ஒதுங்க இடமில்லாமல்,
உறங்க வழியில்லாமல்
நகர்வலம் வந்தேன்.

கோவில் சென்றேன்; அர்ச்சகர் துறத்தினார்;
மாளிகை சென்றேன்; மன்னர் துறத்தினார்;
அடுக்குமாடி வீடுகளுக்கு சென்றேன்; காவலாளி துறத்தினார்;
கிராமத்தில் மச்சு வீடுகள் துறத்தின.

ஆறு கால பூஜைகள் உண்டு
அபிசேக அலங்காரம் உண்டு
காணிக்கை பல வடிவில் உண்டு எனக்கு.
என்ன இருந்து என்ன பயன்?
உறங்க திண்ணை இல்லையே!!

Saturday, May 15, 2010

நினைவுநாள்


யாருமற்ற பின்இரவில்
ஈரம்காயாத ஜன்னலில்
என்னை அழைத்துப்போக வந்திருக்கும்
உன்னை பார்த்ததும்
வரைந்து கொண்டிருக்கும்
உன் விரல்களை பிடித்தும்
என் அந்தியும் சாயும்.

உன்னை வந்தடையும் ஓவ்வொரு
தருணமும் ஓர் பிறப்பே.
உன் நினைவை சுமந்த ஓவ்வொரு
இதயமும் ஓர் கோயிலே.

Monday, May 10, 2010

அணிகலன்

அணியாத வளையல்கள்
உபயோகிக்காத காலணிகள்
அடுக்கி வைத்திருக்கும் உடைகள்
இவையுடன் நானும்
உன்னுடன் இணையாவிட்டால்
தனியாய் அழகில்லை.