Wednesday, December 19, 2012

டூயட்

முன்குறிப்பு:
இதற்கு தகுந்த ஓவியமோ புகைப்படமோ இன்னும் அமையவில்லை :) 

ஆண்:
ஆவணி மாச சாரல் காற்றே என்
அத்தை பெத்த சின்ன முத்தே
ஆளுக்கொரு தூணா சாஞ்சு நிக்கவா
ஆளில்லா வீட்டுக்கு உன்னை வரச் சொன்னேன்.
பெண்:
சித்திரை மாச தங்கக்கட்டி என்
மாமன் பெத்த சிங்கக் குட்டி
தூணப் புடிச்சு சாஞ்சு நின்னவ
தானா வந்தா உன்னை கட்டிப்புடிப்பேன்.
ஆண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிக்கவா
அந்தி சாஞ்சு அரை மணி கழிச்சு
திண்ணையில குத்தவெச்ச.

பெண்:
மதியம் செஞ்ச மீன் குழம்பு ருசிச்சவ
ஊட்டி விடச் சொன்னா
ஓடியா போயிருப்பேன்.

ஆண்:
பரண்மேல் கிடந்த படுக்கையை கடத்தி
தனியா படுத்து உறங்கவா
இத்தனை நாள் தவம் கிடந்தேன்.

பெண்:
படுக்கையை கடத்தி தனியா படுத்து கிடந்தே
மார்மீது சாயச் சொன்னா
மாட்டேன்னா சொல்லியிருப்பேன்.

ஆண்:
கட்டுக்கோப்பா மாமன்  கிடக்க
கழட்டிவிட்ட கண்ணுக்குட்டி போல
கண்டுங்காணாம திரியரையே
பெண்:
ஆறேழு வருஷம் முன்ன நடந்த
ஓடிபுடிச்சு விளையாண்ட கதைய
இப்படி செஞ்சும் உனக்கு புரியலையே.

ஆண்:
பாதி சாமம் ஆன பின்னே
ஊர் உறங்கி போன பின்னே
பாவிப் பையன் என்னை பாத்து
கைகொட்டி சிரிக்கிறியே
பெண்:
மீதி சாமம் உறங்காம
உன்யேவலுக்கு காத்துக் கிடக்கேன்
உரக்கச் சிரித்தும் உனக்கு உரைக்கலையே
செவத்த தோலு மச்சானே.

ஆண்:
ஏண்டி என்னை நோகடிச்சு
ஒரு இராத்திரி வீணடிச்சு
எந்த மலையை கரைக்கப் போற
எப்போ வந்து என்மேல சாயப் போற.
பெண்:
இந்த சொல்லுக்கே ஒரு
இராத்திரி கடத்திட்டியே
மொத்த சொல்லையும் கொட்டிடாதே
மத்த இராத்திரி வீணாயிடும்.

Tuesday, December 18, 2012

தாய்காலம்


நிலாச்சோறு ஊட்டி விட்டவே
இப்போ நிலவ பார்த்து பேசி நிக்கறா
நித்திரை இல்லாம வேலை செஞ்சவே
சித்திரையில் முத்து  குளிச்சா.

எத்தனை நாள் தவம் கிடந்தாலோ
சிறு மயக்கத்தில கிழே விழுந்தா
தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டேன் இவள
தனிய விட்டு தவிச்சு கிடந்தேன்.


ஊரறிய வெறப்பா நின்னேன்
இப்போ உள்ளுற நடுங்கி அலைஞ்சேன்
துணிவே துணையா இருந்தேன்
இப்போ தூணப் புடிச்சு சாஞ்சு நின்னேன்.

மனமே கோயில் என்றிருந்தேன்
இப்போ மரத்தடி விநாயகர் தினம்தொழுதேன்.
பணிவே பழக்கமா வச்சிருந்தேன்
இப்போ பலஊரு கேக்க சிரிச்சு திரிஞ்சேன்.

பல்லாங்குழி வாங்கி வந்தேன்
பரமபதம் வாங்கி வந்தேன்
பலகாரம் வாங்கி வந்தேன் கூடவே
தொட்டில் ஒன்னு செய்யச் சொன்னேன்.

சுவையா பேசும் நாள் வருதே
சுகமா திரியும் நாள் வருதே
கள்ளி உன்னை சிரிக்க வெக்க
சொந்தம் கூடும் நாள் வருதே.

விதவிதமா சீனி போட்டு
பல பலகாரம் ருசிச்சதுல
உன்  உடல் கூடிரிச்சே
என்பொறுப்பு கூடிரிச்சே

செக்க செவக்கும் மருதாணி இலையிலே
வண்ணவண்ணமா சித்திரம் வரைஞ்சு
உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.


உன் அழகு கூடிரிச்சே உன்கூடவே
என் உயிர் சேந்துருச்சே.